புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கான தயார்நிலை குறித்து நாடு முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று ஒத்திகை பயிற்சி நடக்க உள்ளது. கொரோனா பிஎப்.7 வைரஸ் பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா தயார் நிலை ஒத்திகை பயிற்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதார வசதிகள், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன், ஐசியு, வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் போதிய அளவில் உள்ளதா, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் மருந்துகள், உயிர்காக்கும் கருவிகள் ஆகியவை போதுமான அளவில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடக்கும் ஒத்திகையில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று ஆய்வு செய்ய உள்ளார்.
* கர்நாடகாவில் முககவசம் கட்டாயம்
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கட்டாயமாக முககவசம் அணிவது உள்ளிட்ட விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிச 31ம் தேதி, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 2ம் தேதி ஆகிய நாட்களில் இரவு 1மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்களில் கண்டிப்பாக என் 95 முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.